அபியும் நானும்

வா வா என் தேவதையே
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா

(வா வா என் தேவதையே)

வான் மிதக்கும் கண்களுக்கு மயிலிறகால் மையிடவா
மார் உதைக்கும் கால்களுக்கு மணிக்கொலுசு நானிடவா

(வா வா என் தேவதையே)

செல்லமகள் அழுகைப் போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
பொன்மகளின் புன்னகைப் போல்
யுகப் பூக்களுக்குப் புன்னகைக்கத் தெரியவில்லை
என் பிள்ளை எட்டு வைத்த நடையைப் போல
இந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெறிக்கின்ற மழலைப் போல
ஒரு முந்நூறு மொழிகளில் வார்த்தை இல்லை
தந்தைக்கும் தாயமுதம் சுரந்ததம்மா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே

(வா வா என் தேவதையே)

பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் பையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்
தெய்வமகள் தூங்கையிலே
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகைக் கண்டேன்
சிற்றாடைக் கட்டி அவள் சிரித்த போது
என்னைப் பெற்றவள் சாயல் என்று பேசிக் கொண்டேன்
மேல்நாட்டு ஆடை கட்டி நடந்த போது
இவள் மீசையில்லாத மகன் என்று சொன்னேன்
பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகையைப் பார்த்துக் கொண்டேன்

(வா வா என் தேவதையே)




மூங்கில் விட்டு
மூங்கில் விட்டு
சென்ற பின்னே
அந்த பாடொடு
மூங்கிலுக்கு உறவு என்ன

பெற்ற மகள் பிரிகின்றாள்
அந்த பெண்ணோடு தந்தைக்குள்ள
உரிமை என்ன

காற்றை போல்
வெயில் ஒன்று
கடந்து போன பின்
கை காட்டி மரம்
கொள்ளும்
தனிமை என்ன

மாயம் போல்
கலைகின்ற
மனித வாழ்க்கையில்
சொந்தங்கள் சொல்லி செல்லும்
சேதி என்ன

பாசத்தின் ஊடாக ஞானம் கொள்ள
படைத்தவன்
புரிகின்ற
சூழ்ச்சி என்ன




சின்னம்மா கல்யாணம் சீதனம்மாய் என்னத் தர
சின்னம்மா கல்யாணம் சீதனம்மாய் என்னத் தர
சின்னம்மா கல்யாணம் சீதனம்மாய் என்னத் தர

பொன் இருந்தால் பொருள் இல்ல
பொட்டியில பணம் இல்ல
உசுரவிட என் கிட்ட
ஒசந்த பொருள் ஏதுமில்ல

மலிவான பொருளுன்னு
மறுக்காத நீ தாயி
என் உசுர நான் தாரேன்
ஏத்துக்கோ என் தாயி..


Comments :

0 comments to “அபியும் நானும்”


Post a Comment